தினம் ஒரு மணம்
(P.J. கிருபாகரன்)
விபத்தும் விளைவும்
2016 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தென்னிந்திய திருச்சபை ஒன்றின் காலை ஆராதனையில் செய்தியளிக்கும்படியாக மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். நாங்குநேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கடந்த பள்ளம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானேன்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின், பல மாதங்கள் கழித்து, எழுந்து நடமாடும் பெலன் வந்ததும், சேதப்பட்டுக் கிடந்த இருசக்கர வாகனத்தை சரிசெய்ய விரும்பினேன். என்றபோதிலும், அச்சமயம் அதற்கான பணம் இல்லாததினால், அருகிலுள்ள கடைக்கு வாகனத்தை கொண்டு சென்று, எவ்வளவு செலவாகும் என்ற தோராயமான ஒர் மதிப்பீட்டைத் தரும்படி கேட்டுக்கொண்டேன். கடை ஊழியர்களோ, வாகனத்தை கடையில் விட்டு விட்டுச் செல்லுங்கள், இரண்டு நாட்களுக்குள் மதிப்பீடு தருகிறோம் என்றார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்கள் வாகனத்தின் வேலை முடிந்துவிட்டது, உடனே வந்து எடுத்துக்கொள்ளுங்கள்' என்று மறுமுனையிலிருந்து வந்த குரலைக் கேட்டதும், அதிர்ந்துபோனேன். மதிப்பீடுதானே கேட்டிருந்தேன், வேலை செய்யும்படி நான் சொல்லவில்லையே என்றேன். 'சார், இரண்டு நாட்களாக கடையில் வாகனங்கள் பழுது பார்க்கும் வேலை அதிகம் நடைபெறவில்லை, எனவே உங்கள் வாகனத்தின் வேலையை உடனே முடித்துவிட்டோம் என்று உற்சாகமாகச் சொன்னார் கடை ஊழியர்.
கையில் காசு இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில், நான் 'நிற்பது கூட பிடிக்காமல், காலை வாரி கீழே விழவைத்துதிட்டார்களே' என்று உதறத்தொடங்கிய என் உள்ளத்தின் சத்தத்தை கடைக்காரரிடம் உதடுகள் சொல்லவில்லை. என்றாலும், எவ்வளவு பணம் என்று கேட்டபோது, 11584.00 ரூபாய் என்ற அடி செவியில் விழுந்தது.
சாத்தியமே இல்லை என்பதை அறிந்துகொண்டவனாக, என்ன செய்வது? என்ற கேள்வியே மாத்திரமே மனதில் கேட்டுக்கொண்டு, வீட்டில் படுத்திருந்தேன்.
கர்த்தரின் கைவிரல் எழுத்துக்கள் ராஜாவை கலங்கப்பண்ணினது போல, கடைக்காரர் சொன்ன 11584.00 ரூபாய் என்ற வார்த்தைகள் என்னைக் கலங்கப்பண்ணினது. வாகனத்தை யாரிடமாவது விற்றுவிட்டு, அவர் தரும் தொகையினைக் கொண்டு வாகனத்தை எடுத்து வாங்குபவரிடம் கொடுத்துவிடவேண்டியதுதான் என்ற முடிவினையே என் மனம் இறுதியாக எடுத்தது.
விற்பனை செய்வதற்காக தகுந்த நபரைத் தேடிக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஆனது. கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடுமோ என யோசித்துக்கொண்டேயிருந்தேன்.
அப்போது திடீரென அயல்நாட்டிலிருந்து ஒர் தொலைபேசி வந்தது. மகளுக்குப் பிறந்தநாள், எனவே யாராவது ஒரு ஊழியருக்கு காணிக்கை கொடுக்க நினைத்தோம், கடைசியாக உங்கள் பெயர் தான் நினைவுக்கு வந்தது, எனவே, இரண்டு நாட்களுக்கு முன் உங்களது வங்கிக் கணக்கில் 12000 ரூபாய் போட்டிருக்கிறோம், கிடைத்ததா? என்று அந்த சகோதரர் என்னிடத்தில் கேட்டபோது, ''பார்க்கவில்லை'' என பதில் சொன்னேன்.
அந்த சகோதரருடன் பேசி முடித்ததும், ATM க்குச் சென்று பார்த்தபோது, ரூபாய் 12000 எனது கணக்கில் வந்திருந்தது. அதனை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றேன். எனது வாகனத்தை மெக்கானிக் ஒருவர் தள்ளிக்கொண்டு வந்து, பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கொடுத்தார். 11584 ரூபாயை கடைக்குக் கொடுத்துவிட்டு, மீதமிருந்த பணத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.
'ஆபத்திலும் அவர் ஆயத்தம் செய்பவர் என்பதை என் மனது அன்று புரிந்து கொண்டது.'
என்றபோதிலும், விபத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நான் மீண்டும் இருசக்கர வாகனம் ஓட்டுவதை விரும்பாமல், அதை விற்றுவிட நினைத்தபோது, அது இருவரது திருமண உடன்படிக்கையை வெளிப்படுத்தும் நிச்சயதார்த்த மோதிரத்திற்குப் பதிலாக வாங்கப்பட்ட வாகனம் என்பதை அறிந்திருந்ததினால், வாகனத்தை விற்பதினால் கிடைக்கும் தொகை எனக்குச் சொந்தமானதல்ல என்பதை உணர்ந்துகொண்டபோது, வாகனத்தின் விற்பனைத் தொகையை என் கிராமத்தின் அருகில் புதுப்பிக்கப்பட்டுக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 'சர்ச் ஆப் காட்' ஆலயத்தின் பணிக்காகக் கொடுத்துவிட அர்ப்பணித்தவனாக, கீழ்க்கண்ட கடிதத்துடன் அனுப்பிவைத்தேன்.
சபை போதகருக்கு நான் எழுதிய கடிதம்
கிறிஸ்துவுக்குள் அன்பான போதகர் அவர்களுக்கு,
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இக்கடிதத்தின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் உவகையடைகிறேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான் (பிர 3:11) என்ற வார்த்தையின்படியும், அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோம 8:28) என்ற வார்த்தையின்படியும் இம்மட்டும் எங்களை வழிநடத்தின யெகோவா தேவனுக்கு ஸ்தோத்திரம்.
நான் தூத்துக்குடியில் இருந்தபோது, ஊழியத்திற்காக ஓர் இருசக்கர வாகனம் தேவைப்பட்டது. நானும் எனது மனைவியும் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் இருவரின் கரங்களிலிருக்கும் மோதிரம் என் சிந்தையில் உதிக்க, எனது மனைவியிடம் அனுமதி கேட்டேன். அவளும் உடனே சரி என்று சொல்லிவிட்டாள். இரண்டு மோதிரங்களையும் கழற்றினவர்களாக, இருவரும் தூத்துக்குடியிலுள்ள ஓர் நகைக்கடைக்குச் சென்றபோது, அது எங்களது திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்பதை அறிந்துகொண்ட கடைக்காரர் எங்களை நோக்கி, 'கட்டாயம் விற்கவேண்டுமா?' என்று கேட்டார். நாங்கள் இருவரும் ஒருமிக்க ஆம் இப்போது அவசியம் என்றோம். அதை கொடுத்துவிட்டு, அதன் கிரயத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.
2015-ம் ஆண்டு, பிரசங்கிக்கும்படியாக நான் ஒரு கிராமத்திற்கு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானேன். நானும் எனது மனைவியும் பலத்த காயமுற்றோம். மரணத் தருவாயில் போராடிக்கொண்டிருந்த என்னை பல மருத்துவமனைகள் சிகிச்சைக்கு ஏற்க மறுத்தன. என்றபோதிலும், கர்த்தருடைய கிருபையினால் திருநெல்வேலியில் உள்ள ஓர் மருத்துவமனையில் வாசல் திறக்க, பல நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். வீடு திரும்பினதும், அந்த வாகனத்தை விற்றுவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, 'அது இருவரின் திருமண உடன்படிக்கைக்கு உட்பட்டதாயிற்றே' என்ற எண்ணம் எனக்குள் எழ, அந்த பங்கு தேவனிடத்திலேயே சேரவேண்டும் என்று தீர்மானித்தேன். அப்போது, உங்களுடைய ஆலத்தின் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்த என்னை சட்டென கர்த்தர் முடிவெடுக்கச் செய்தார். என்ன சொல்லி கொடுக்கவேண்டும்? என்ற விண்ணப்பத்திற்கு, 'என் வார்த்தை பிரசங்கம் செய்யப்படும் பீடத்திற்கென்று' என்ற உறுதி உடனே கிடைத்தது. எனவே, தயவு செய்து இதனை ஏற்றுக்கொள்ளவும். ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்படும் முன்பே இதனைக் கொடுக்க மிகவும் பிரயாசப்பட்டேன். என்றாலும், வண்டியை எடுத்த நபர் இத்தனை ஆண்டுகளாகக் கடத்திவிட்டார்; மன்னிக்கவும்.
இப்படிக்கு,
கர்த்தரின் ஊழியன்
